எல்லாப் புகழும் ஜெயமோகனுக்கே – புள்ளிவிவரப் புலிக்கணக்கு
வலைஞர்கள் ஜெயமோகனை ஆர்வமாகத் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களின் வலையில் ஸ்னாப்ஜட்ஜ் விழ, வருகையாளர் கணக்கு எகிற ஆரம்பித்திருக்கிறது. அப்படி வந்து விழுபவர்களுக்காக சில பின்னணிப் பதிவுகள்:
1. எம்.ஜி.ஆரைக் குறித்தும், சிவாஜியை குறித்தும் ஜெமோ என்ன எழுதினார்? இங்கே கிடைக்கிறது: கில்லி – Gilli » Blog Archive » Jeyamohan – Nadigar Thilagam Sivaji Ganesan & Makkal Thilagam MGR
2. இப்போது ஏன் இது புகழ் பெற்றது: கில்லியில் பாலாஜியின் குசும்பை விட, விகடனின் வியாபாரம் பெரிதினும் பெரிது – IdlyVadai – இட்லிவடை: “விகடன், ஜெயமோகன், சாரு நிவேதிதா”
3. அதற்கப்புறம் என்ன ஆச்சு: மேலும் மேலும் விற்பனை – IdlyVadai – இட்லிவடை: “விகடன் எரிப்பு – ஜெயமோகன் இனிமேல் ஜாக்கிரதையாக இருக்கனும்.”
4. சரி… ஜெயமொகனார் இதற்கெல்லாம் என்ன சொல்கிறார்? – jeyamohan.in » Blog Archive » ஆனந்தவிகடனின் அவதூறு
5. அந்த ஆனந்த விகடன் கட்டுரை எங்கே கிடைக்கிறது? – காப்பி பேஸ்ட் செய்து கொடுக்கிறார் மோகந்தாஸ்
6. இதைப் பற்றியெல்லாம் பிறர் என்ன எழுதி இருக்கிறார்கள்:
- ஆனந்த விகடனா ஆயத்துலா கொமேனியா? – கண்ணன் (உரக்கச் சொல்வேன்)
- jeyamohan.in » Blog Archive » ஆனந்த விகடன் கண்டனம்: “் இரு கடிதங்கள்”
- ஜடாயு எண்ணங்கள்: ஜெயமோகன் பதிவும், ஆனந்த விகடனும்
- கடலையூர்: நானும் ஜெயமோஹனும் ஒன்றுதான்!!! – செல்வம்
- கடலையூர்: ஜெயமோஹனும், சாதியும்!!! என்ன கொடுமை சார் இது? – செல்வம்
- என்னையே வெட்கி கூசிச்சுருங்கும் சிற்றுயிர் நான்!! – மதி கந்தசாமி
- நயனம் – nayanam: “சரோசாதேவியின் நடிப்பை………”
- நயனம் – nayanam: “சிவாசியின் நடிப்பு மிகை நடிப்பா?” – நாக.இளங்கோவன்
- “சாத்தான்”குளத்து வேதம்: “போலி டோண்டு = ஜெயமோகன்????! !!!!!” – ஆசிப் மீரான்
- “சாத்தான்”குளத்து வேதம்: “வெற்றி மோகனும் தனி மொழியும்” – ஆசிப் மீரான்
- பெத்துசாமியின் உலகம்: 2/17/08 – 2/24/08: “ஜெயமோகனும் – தமிழர்களும் – பாகம் II” – செந்தாரப்பட்டி பெத்துசாமி
-
: கூட்டாஞ்சோறு (20-02-08) – லக்கிலுக் - என் பயணத்தின் பிம்பங்கள்…!: ஒதுங்கிக் கொள்வது நன்று! – இரா. வசந்த குமார்
- வால் பையன்: தமிழ் இலக்கியத்தில் ஏதேனும் ஓட்டை விழுந்து விட்டதா?
- கைமண் அளவு: நகைச்சுவைக்குள் பதுங்கும் மேட்டிமைத்தனம் – ஜெகத்
- குரல்வலை: சிரிப்பு போலீஸ்! – எம்.எஸ்.வி. முத்து
- ராசபார்வை…: கேப்பில் ஏரோப்பிளேன் ஓட்டுதல் – கொங்கு ராசா
- பினாத்தல்கள்: அவியல் – 18 Feb 08 – சுரேஷ்
- உள்ளங்கை » Blog Archive » அறிவு ஜீவிகளின் செல்லப் படுத்தல்கள்! – எஸ்.கே
- திணை… இசை…. சமிக்ஞை….. நாகார்ஜுனன்……: – ஆனந்த விகடன் செயலுக்குக் கண்டனம்
- தருமி: 250. சுடச் சுட ஆ.வி.
- விகடனின் Moral Policing! « selections
6. (அ) இதற்கெல்லாம் முன்பே, ஜெயமொகனின் பதிவில் உள்ள பிழைகளை ஆசாத் சுட்டியுள்ளார்: எண்ணம்: ஜெயமோகன் அய்யா சொல்லிய தவறான தகவல் – எம்.ஜி.ஆர். பாடலில்” (இங்கு இருக்கும் மறுமொழி விவாதமும் குறிப்பிடத்தக்கது)
7. கேள்வி – பதில்: jeyamohan.in » Blog Archive » இதழ்களும் மதிப்பீடுகளும்: “நீங்கள் ஆனந்தவிகடன் குமுதம் போன்ற பெரிய பத்திரிகைகளில் எழுதியிருக்கிறீர்கள். அவை இப்போது நீங்கள் சொல்லும் ethics கொண்டவையா என்ன?”
8. இந்த மாதிரி ‘போட்டுத்தாக்கு’விற்கு இந்த மாதிரி வெளிப்படையான பதிவுகள் கூட காரணமாக இருக்கலாம்: jeyamohan.in » Blog Archive » கனிமொழி வணக்கம் (இதற்கான பதில்: பி.கே. சிவகுமார்: “அன்புள்ள ஜெயமோகன்”)
9. அல்லது எப்போதுமே எதிர்வினைகளை இயல்பாக உருவாக்குபவர் என்பதாகக் கூட இருக்கலாம்: டிசே தமிழன்: “இயல் விருதின் நவீன தேவதூதுவர் ஜெயமோகனிற்கு…”
10. எது எப்படி போனாலும், ஜெய மோகனின் வாசகர்கள் அவரைத் தொடரும் குரல்கள்: பேசலாம்: ஜெயமோகனோடு ஐந்து நிமிடங்கள் (இதற்கான பதில்: தனிமையின் இசை: தமிழச்சி,ஜெயமோகன் இன்ன பிற கடுப்புகள் – அய்யனார் )
11. எல்லாவற்றுக்கும் செயமோகனின் பதில்: jeyamohan.in » Blog Archive » விகடனை எண்ணும்போது…
12. சாரு நிவேதிதாவின் பதில் தாக்குதல்: ஜெயமோகனின் சுயமோகம்: கொலைவெறி – Thappu Thalangal 246: மம்மி ரிடர்ன்ஸ் (பகுதி ஒன்று)
பார்ட் டூ - Thappu Thalangal 246
13. வினையான தொகை: “ஜெயமோகனின் திருட்டு – ஒரு சான்றாதாரம்” – சொல் புதிதுவில் வெளிவந்த வடிவம் எஸ். அருண்மொழி நங்கையின் ‘தமிழிசை – ஒரு பின்னோக்கிய பார்வை’ & ‘மனோரமா இயர் புக்’ இல் வெளிவந்த மூலக் கட்டுரை – தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இசைத்துறையின் முனைவர் இ. அங்கயற்கண்ணி எழுதிய ‘காலந்தோறும் தமிழிசை’ (கவிதாசரண் சனவரி – பிப்ரவரி 2004.)
14. லக்கிலுக் -
: ஜெயமோகன் வணக்கம்! & சுருக்கமாக அறிய, நச்சோ நச் பதிவு:
: ஆவி – ஜெமோ விவகாரம்! என்னதான் நடக்கும்?
15. பைத்தியக்காரன் - சிதைவுகள்…: “ஜெயமோகன், ஆனந்தவிகடன், நாகார்ஜுனன் மற்றும் கருத்து கந்தசாமி”
16. சின்னஞ்சிறுகதைகள் பேசி….: அந்நியன், ஜெமோ, அம்பி – சுகுணா திவாகர்
17. செயமோகனின் டவுசர கிழிக்கும் சாருநிவேதிதா – பண்புடன் | Google Groups
இதெல்லாம் ஏற்கனவே படித்தறிந்தவர்களுக்கான வலைப்பதிவு டிப்ஸ்:
- எக்காரணம் கொன்டும் Category & Tags- ஐ மறக்க வேண்டாம். குறிச்சொல்லிடவும்.
- தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மாற்றும்போது பெயர் குழப்பம சகஜம். எனவே Jeyamohan & Jayamogan போன்ற அனைத்தையும் பயன்படுத்தவும்.
- இடுகை நடுவிலும் தேடலில் பயன்படுத்தும் சொற்களை நுழைக்கவும். அதாவது திடீரென்று Jayamohan ஆங்காங்கே வந்திருக்க வேண்டும்.
- இம்புட்டும் இருந்து மேட்டர் எனப்படும் content இல்லாவிட்டால், Splog ஆகும் அபாயம் இருப்பதால், ஒழுங்காக உள்ளடக்கத்தை நிறைவாக வைத்திருக்கவும்.
- எப்பொழுது எந்த வார்த்தை சூடாகும் என்று வருங்காலம் தெரியாததால், நமீத, த்ரிஷா குறித்த பதிவுகள் நடுவே, இலக்கியத்தையும் எழுதி தமிழ்த்தொண்டாற்ற அழைக்கிறேன்.
தொப்பி
January 11, 2008 – 7:19 pm
எஸ்.ராமகிருஷ்ணன், கலாப்ரியா, நாஞ்சில்நாடன் ஆகியோர் நடுவே என்ன ஒற்றுமை? கலாப்ரியா எப்போதுமே ஆழமான மனச்சோர்வுடன் இருப்பார். விசேஷ நாட்களில் சோர்வு இன்னும் அதிகமாகும். ஆனால் எஸ்.ராமகிருஷ்ணனை நான் திருவண்னாமலையில் முதலில் பார்த்தபோது குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்தார். ”ஏன் சார் அப்டி சிரிக்கிறார்?”என்று ரகசியமாக பவா செல்லத்துரையிடம் விசாரித்தேன். ”அவர் அப்டித்தாங்க சிரிப்பாரு…” என்றார். ”அது சரி…ஆனா எதுக்கு சிரிக்கிறார்?” அவர் ”அதாங்க நானும் சொன்னேன்,அவரு அப்டித்தான் சிரிப்பாரு”.
பிறகு நான் சந்திக்கும்போதெல்லாமே எஸ்.ராமகிருஷ்ணன் குலுங்கிக் குலுங்கித்தான் சிரித்துக் கொண்டிருந்தார். அவரது சரீர அமைப்பே அதற்கு வாகாகத்தான் வடிவம் கொடிருக்கிறது. கண்கள் மூக்கு உதடுகள் எல்லாமே.. அவரது பொழுதுபோக்கே அதுதான் என்றார்கள். சிரிக்கத் தோதாக ஏதுமில்லாதபோது சாரு நிவேதிதாவை நினைத்துக் கொள்வாராம். வேண்டாம், புரையேறிவிடும் என்று மனைவி சொல்லி விலக்கினாலும் அதை தவிர்க்க முடிவதில்லை.
நாஞ்சில்நாடனுக்கு என்றால் அறுபதிலும் தலையில் முழுக்க மயிர். அறுபதாம் விழாவில் ஆசீர்வாதம்செய்துபோட்ட அட்சதைகளை பேன்சீப்பு போட்டு சீவி எடுக்கவேண்டும். மாறாக எஸ்.ராமகிருஷ்ணன் கல்லூரியில் படிக்கும்போதே தலையில் முடியில்லாமலிருந்தார் என்று தகவல். அவரது அறுபதாம் கல்யாணத்தின்போது கற்பனைசெய்யவே கஷ்டமாக இருக்கிறது.
மூவருக்கும் இடையே என்ன ஒற்றுமை? ஒன்றே. மூவரும் அந்தக்கால எம்.ஜி.ஆர் ரசிகர்கள். நாஞ்சில்நாடன் வடசேரி தங்கம் திரையரங்குக்கு அதிகாலையிலேயே வந்து காவல்கிடந்து ‘அடிமைப்பெண்’ முதல்நாள் முதல்காட்சி பார்த்திருக்கிறார். நெல்லைவரை ரயிலில் வரும் ‘பொட்டி’யும் அந்நேரம்தான் கிளம்புமாம். ‘பொட்டி வந்தாச்சா?’ என்ற எதிர்பார்ப்பு. ”வள்ளியூர் தாண்டியாச்சுலே” என்று ஒரு குரல். நாஞ்சில்நாடன் அதற்கே விசில் அடித்து எம்பிக்குதிப்பாராம். பெட்டி நாகரம்மன் கோயில் போயிருக்கிறது என்ற அடுத்த செய்தி.”நாகரம்மோ எல்லாம் நல்லபடியா நடக்கணும்!” என்று நெக்குருகிப் பிரார்த்தனை. பெட்டி நுழைகையில் தலைவரையே நேரில் பார்த்த பரவசம்.
கலாப்ரியா எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற செயல்பாடுகளில் இருந்திருக்கிறார். கூழ் காய்ச்சுதல், இரவெல்லாம் தெருவில் அலைந்து போஸ்டர் ஒட்டுதல்.சிவாஜி படம் மீது சாணி அடித்தல். சிவாஜி ரசிகர்களை வசைபாடுதல் போன்ற தீவிர மன்றப்பணிகள். எஸ்.ராமகிருஷ்ணனின் ஆர்வம் தலைவர்மீதா நாயகிகள்மீதா என்று அவர் சென்னை அம்பிகா எம்பயர் ஓட்டலில் என் அறையில் இரவெல்லாம் பரவசமடைந்து கொண்டிருந்த போது என்னால் ஊகிக்க முடியவில்லை. ஒருவேளை தலைவர் தன் தலைவியரை கையாளும் ‘விதம்’ மீதான பற்றாக இருக்கலாம். அம்மை அப்பன் என்றுதானே உலகு தொழுகிறது?
எங்களூரில் காந்தராவ், கிருஷ்ணா போன்ற தெலுங்குநடிகர்களுக்குத்தான் செல்வாக்கு. குலசேகரத்தில் இரண்டே தியேட்டர்கள், ஒன்றில் மலையாளப்படம் என்பதனால் எம்.ஜி.ஆர் வேறுவழியில்லாமல் ரசிக்கப்பட்டார். செல்லப்பெயர் தொப்பி. அவர் முதுமையை மறைக்க முகத்தின்மீது பச்சைப்பப்படம் ஒட்டுவதாக கணியான் சங்கரன் சொல்லி எங்களூரில் பரவலாக நம்ப்பபட்டது. ஆகவே பச்சைப்பப்படம் என்ற பேரும் சில இடங்களில் புழக்கத்திலிருந்தது.
அவர் இரு லேகியங்களை தவறாமல் உண்பதுண்டாம். ஒன்று தங்க பஸ்பம். நிறம் மங்காமலிருப்பதற்காக. இன்னொன்று சிட்டுக்குருவி லேகியம், வீரியத்துக்காக. ஆண் சிட்டுக்குருவிகள் எந்நேரமும் பெண்புடைசூழ இருக்குமாம். ஆயிரக்கணக்கில் ஆண்சிட்டுக்குருவிகளைக் கொண்டு செய்யப்படும் சிட்டுக்குருவிலேகியம் சாப்பிடுவதனால் எம்.ஜி.ஆர் வெளிப்புற படப்பிடிப்பில் இருந்தால் அவரை மொய்க்கும் பெண் சிட்டுக்குருவிகளை விரட்ட தலைக்குமேல் வலையைகட்டி ஜஸ்டின் தலைமையில் ஒரு குழு தயாராக இருக்குமாம். வதந்திதான்.
லேகியத்தின் பலன்களை நாம் சினிமாவிலும் பார்க்கலாம். எம்.ஜி.ஆர் காதல்காட்சிகளில் மூன்றுவகை நடிப்புகளை வெளிப்படுத்துவார். நெளிந்து நின்று கீழுதட்டை கடித்து அரைப்புன்னகையுடன் மேலும் கீழும் பார்ப்பது [பறித்தாலும் துணிபோட்டு மறைத்தாலும் பெண்ணே…] கதாநாயகியின் பின்னால் வந்து நின்று அவள் இரு புஜங்களிலும் பிடித்து சரேலென்று ஒருபக்கமாக விலக்கி காமிராவைப்பார்த்து உதட்டைச் சுழிப்பது. இடையை ஒசித்து ஒசித்து செல்லும் [ஷாட் முடிந்தபின் சரோஜாதேவிக்கு இடுப்பில் எண்ணைபோட்டு சுளுக்கு எடுப்பார்களாமே] கதாநாயகிக்கு பின்னால் துள்ளி ஓடுவது. இதைத்தவிரவும் பல சிட்டுக்குருவித்தனங்கள். சிறிய மேடுகளில் இருந்தும் பெஞ்சுகளில் இருந்தும் விருட் விருட் என்று எம்பிக்குதிப்பது. ஓடும்போதே சுழன்று வருவது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு தாவுவது.
வயலில் மேயும் எருமையைக் கண்டு பதறிக்கூப்பிடுவதுபோல எம்.ஜி.ஆர் கைநீட்டி நீட்டி பாடும் ஒற்றையாள் பாட்டுகள் எங்களூரில் ரசிக்கப்படவில்லை. ‘என்ன நீக்கம்புக்கு கைய நீட்டுதான்…பாடணுமானா ஒரு பாகத்தில அனங்காம இருந்து தொடையில தாளமிட்டா போராதா?” என்று தங்கையன் மெம்பர் அபிப்பிராயப்பட்டார். மேலும் எங்களூரில் ‘சத்தியமான ஆவிக்குரிய சுவிசேஷ எழுப்புதல்’ கூட்டத்துக்கு வரும் வெள்ளைக்காரப் பாதிரிமார்களும் ‘ஓ ஸின்னர்ஸ்!’ என்று கூவும்போது அப்படித்தான் கைகளை நீட்டிக் காட்டுகிறார்கள். [அருகே நிற்கும் உள்ளூர் உபதேசியாரின் தமிழாக்கம்: கர்த்தாவை மறந்து நித்ய நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும், நெறியும் விலையும் கெட்ட அவிசுவாசிகளான , கோயிலுக்கு தசம பாகம் கொடுக்க கணக்கு பார்க்கக்கூடியவர்களான, விரியன் பாம்புக்குட்டிகளே!] எம்.ஜி.ஆர் ‘அதோ அந்த பறவை போல வாழவேண்டும்’ என்று பாடும்போது ‘அதோ ஏசு மேகங்களுடனே வருகிறார்!’ என்றுதான் நானெல்லாம் கேட்டு பரவசமடைவேன்.
அத்துடன் மழையில் நனைந்து பாடுவதையும் எங்களூர்க்காரர்கள் விரும்பவில்லை. தென்குமரிநாட்டில் வருஷத்தில் ஏழுமாசம் மழை. ‘எளவெடுத்த மழையாலே பிள்ளைய பெருத்துப்போய் பிளைக்கவும் பளுதில்லியே’ என்று நொந்துபோயிருக்கும் மக்களுக்கு மழையில் எம்.ஜி.ஆர் ‘இளமை முழுதும் நனைய நனைய மழையடிக்குதடி’ என்று பாடும் ஜெயலலிதாவுடன் சேற்றில் குதித்து ஆடுவது கடுப்பேற்றியது. ”அந்த பட்டத்திக் குட்டிக்கு பிராந்துண்ணா இவனுக்கு எங்க போச்சு புத்தி? ஒரு நாலு நல்லவாக்கு சொல்லி எடுத்து உள்ள கூட்டிட்டுபோயி சுக்குவெள்ளமோ மற்றோ குடுக்கப்பிடாதா? வல்ல நீர்தோசமோ மற்றோ பிடிச்சா பின்ன இவன்லா வச்சு பாக்கணும்?”
எம்ஜிஆரின் நடிப்பு சீரானது. அவரது கை இடுப்பில் இருந்தால் அவர் நகைச்சுவையாக நடிக்கிறார் என்று பொருள். அவர் சுவரை நோக்கி திரும்பிக் கொண்டால் அழுகிறார். முகவாயை தடவினால் கிண்டல் செய்கிறார்- அனேகமாக காதலியை. அவர் என்றுதெரியாமல் அவள் ‘யோவ்’ என்று கூப்பிடும்போது குறிப்பாக. [அடி போடிக்கண்ணு எல்லாம் தெரியுமடீ எனக்கு முன்னாலே] சிரித்தபடி லேசாக குலுங்கினால் வில்லன்களை அடிக்கப்போகிறார். ஒரு கிழவி தள்ளாடி நடந்துபோனால் எக்கணமும் எம்.ஜி.ஆர் வெட்டுக்கிளி போல பின்னாலிருந்து தாவி வரப்போகிறார். கனத்த எடையை இழுக்கும் ரிக்ஷாக்காரருக்கு கண்டிப்பாக அஞ்சேகால் நொடிக்கு அவர் இழுத்து உதவிசெய்வார். எங்களூர் ரசிகர்களுக்கு இது குழப்பமில்லாத நடிப்பாக இருந்தது. சிவாஜி மாதிரி , கொஞ்சம் மழை பெய்கிற படத்தை டெண்டுகொட்டகையில் ஒலியின் உதவியை மட்டும் கொண்டு பார்க்கும்போது குலுங்கிச் சிரிக்கிறாரா குலுங்கி அழுகிறாரா என்ற குழப்பமெல்லாம் வருவதில்லை.
நம்பியார் நடிப்பும் அதேபோல கச்சிதம். உள்ளங்கையில் இன்னொருகை முஷ்டியை சுருட்டி குத்திக் கொண்டு ‘ஜ்ஜ்ஜ்ஜக்கூ’ என்று உறுமினாரென்றால் பந்தம் கண்ட பெருச்சாளி போல விழித்தபடி ஜஸ்டின் வருவதும் அடுத்த காட்சியில் அடிதடியும் உறுதி. மாறுகண்ணோ என்ற ஐயம் வரும்வரை இரு கண்களையும் உருட்டிக்கொண்டாரென்றால் நம்பியார் சதி செய்கிறார். மீனை விழுங்கும் பறவை போல அண்ணாந்து சிரித்தாரென்றால் எதிரே எம்.ஜி.ஆரின் அப்பா அம்மா அல்லது அண்ணி அண்ணா இருவரும் கட்டுண்டு கிடக்கிறார்கள். இருபக்கமும் தலையை திருப்பி திருப்பி ,சூடான டீயை வாயில் விட்டுக்கொண்டவர் போல கழுத்துச்சதைகள் அதிர சிரித்தாரென்றால் கதாநாயகியின் ஜாக்கெட்டை தோள் பகுதியில் மட்டும் கச்சிதமாகக் கிழித்து கற்பழிக்க முயற்சி செய்கிறார் என்று பொருள். குருசாமிக்கு உண்மையான கற்பழிப்பு நோக்கமெல்லாம் கிடையாது என்பது அவர் இறுக்கமான கால்சட்டை, சட்டை அதன்மேல் எல்லா பித்தானும்போடப்பட்ட கோட்டு , ஷ¥க்கள்,எல்லாம் போட்டபடியே பாய்வதிலிருந்து தெரியவரும். சமயங்களில் டையைகூட அவர் கழற்றுவதில்லை.
எம்ஜிஆர் தமிழ்ப் பண்பாடும் தவறுவதில்லை. [ இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்பிளை…] பாட்டில் கதாநாயகியை புல்தரையிலும் மணலிலும் போட்டு புரட்டி எடுத்து , மெல்லிசான சேலை உடுத்திருந்தாளென்ரால் மழையில் நனைய வைத்து, காமிரா பக்கவாட்டில் இருக்கிறதென்றால் முந்தானையை பிடித்து இழுத்து, உதட்டைக் கடித்தபடி பின்னால் துள்ளி ஓடி இடைபிடித்து இழுத்து அணைத்து, அவள் கால்கள் நடுவே காலை நுழைத்து ராமன் வில்லை வளைப்பதுபோல வளைத்து, அவளை பூச்செடிகளுக்கு பின்னால் இட்டுச்சென்று இரு பூக்களை ஒன்றோடொன்று உரச வைத்து, பாறைமேல் படுக்கவைத்து மேலேறிப்படுத்து நாஸ்தி செய்தாலும் பாட்டு இல்லாதபோது பண்பாக ”அதெல்லாம் கையானதுக்கு அப்பம். நீ இப்ப வீத்துக்கு போ” என்றுதானே அவர் சொல்கிறார்? [ராதா சலூஜாவை அவர் மேலாடை களைந்து குளிப்பாட்டின காட்சியில் மெய்மறந்து விட்டு வீடு திரும்பும்போது என்னிடம் எட்டான் கேட்டான்.”ஏம் மக்கா, இதாக்கும் இல்லியா இந்த இதயக்கனீண்ணு செல்லுகது?]
கடைசியாக, சண்டைக்காட்சிகள். அவற்றைச் சின்னக் குழந்தைகூட பார்க்கலாம். ரத்தம் கிடையாது. மரணம் இல்லை. கௌரவமான இடங்களில்தான் அடி. அம்பாசிடர் காரில் எம்ஜிஆர் வரும்போது ஜஸ்டின் எதிரே தன் ஆட்களுடன் வந்தால் என்ன செய்வார்? காரை அப்படியே தலைக்குமேல் தூக்கி சிலம்புக்கம்புகளை தடுப்பார். மேலும் ஆட்கள் மரியாதை தெரிந்தவர்கள். தலைவர் கால்மடக்கி அமர்ந்து தலைக்குமேல் தூக்கிய காரால் நூற்றி என்பத்தியாறு சிலம்புகளை தடுத்து புஜம் புடைக்கும்போது ஒருவருக்கும் ஒரு சிலம்பை உருவி அவர் கணுக்காலில் ஒன்றுபோட்டாலென்ன என்று தோன்றாது. எங்களூர்க்காரர்கள்தான் ”ஏலே வலத்தால உருவி சொளட்டி வாங்கி அடிலே…ஏல மீச, நீ நிண்ணு உருவி எடம் வந்து அடில…நிக்கானுக பாரு அறுப்புக்கு சூடடிக்குத லெச்சணமாட்டு…”என்று கூவுவார்கள். தெலுங்குப்படச் சண்டைகளில் யார் எங்கே எவரை அடிக்கிறார்கள் என்று தெரியாமல் ஒரே ‘பாஸ்ட் ·பார்வேட்’ துள்ளலாக இருக்கும் என்பதனால் எங்களூரில் அவற்றுக்கு மவுசு அதிகம். ‘அடிச்சா அந்தமாதிரி அடிச்சணும்லே மக்கா.கிருஷ்ணாவை பாத்தியா குண்டியிலே கரண்டடிச்சவன் மாதிரில்லா துள்ளுகான்?”
எம்ஜிஆர் சண்டைக்காட்சிகளை கோயில் பூசாரி கேசவன் போற்றி ‘பிரசாதம் வெளம்புதல்’ என்று அனுபவத்தால் வகுத்தார். கொஞ்சம் நெரிசல் இருந்தாலும் அடிவாங்குகிறவர்கள் வரிசையாகத்தான் வருவார்கள்.அடி வாங்கிக்கொண்டு பின்னால் சென்று அதை சாப்பிட்டு கையைத் துடைத்தபின்னர்தான் மீண்டும் வருவார்கள். ஒருவரோடொருவர் முட்டிக் கொள்வதில்லை. ஒருவருக்கொருவர் வாங்குவதில் தள்ளுமுள்ளும் இல்லை. அடி முடிந்தபின் எம்.ஜி.ஆர் சுண்டல் தீர்ந்த போற்றியைப்போலவே கையை தட்டுவதும் உண்டு.
கடைசிக்காட்சியில் நம்பியார் மனம் திருந்துவது எங்களூரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.’தொழிலாளி’ படத்தில் எம்ஜிஆர் அடித்து இடுப்பை உடைத்துபோட யானைமேலிருந்து விழுந்தவர்கள் போல வில்லன் கோஷ்டி ஆங்காங்கே சிதறிக்கிடக்க ”ராஜா!’ என்று அதுவரை கட்டில் கிடந்த அம்மா ஆனந்தக் கன்ணிருடன் வந்து கட்டிக் கொண்டு கதாநாயகியை நோக்கி ”வாம்மா” என்று அழைத்து தலையை தடவிக் கொண்டிருக்கும்போதுதான் போலீஸ் சைரன். குறுக்குப்பட்டை அணிந்து அமெச்சூர் முழி கொண்ட இன்ஸ்பெக்டர் படைகளுடன் உள்ளே வந்து ”மிஸ்டர் கபாலி யூ ஆர் அண்டர் அரெஸ்ட்” என்று சொல்லி பின்னால் கையை சுழற்றி பிடித்து நம்பியாரை எழுப்பி எம்.ஜி.ஆரிடம் ”வெல்டன் மிஸ்டர் ராஜா…உங்களைப்பத்தி நாங்க எங்க மேலிடத்திலே சொல்றதா இருக்கோம்” என்று சொல்கையில் நம்பியார் தலைகலைய குனிந்து உதட்டை இறுக்கமாக வைத்துக் கொண்டு ”நான் வரென் மிஸ்டர் ராஜா. நீங்க உருவாக்குற புதிய சமுதாயத்திலே என்னை மாதிரி புல்லுருவிகளுக்கு இடமில்லை” என்று சொல்லும்போது குலசேகரம் செண்ட்ரல் தியேட்டரில் ”பின்ன என்ன மயித்துக்குலே நீ நடிக்கதுக்கு அட்வான்ஸ் வேங்கினே?”என்ற ஆவேசக் குரல் கேட்டது.
ஆனால் எம்.ஜி.ஆர் படத்தில் பாடல்கள் அர்த்தமுள்ளவை. ‘ஆண்டவன் உலகத்தின் முதலாளி..அவனுக்கு நானொரு தொழிலாளி!’ அப்படியென்றால் ஏமாற்றலாம். கூலி கேட்டு வையலாம். போஸ்டர் ஒட்டி நாறடிக்கலாம். இது இப்போதைய சிந்தை. அன்றெல்லாம் பாட்டு புரிவதில்லை. ‘தம்பீ நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று…” காஞ்சி என்றால் என்ன? தொடுவட்டியில் வாங்கின சாணித்தாள் பாட்டுபுத்தகத்தில் பொதுவாக பிழைகள் அதிகம். ஆகவே உள்ளூர் தமிழறிஞரான நான் அதை ‘கஞ்சியிலே’ என்று திருத்தினேன். அப்படியானால் ‘படித்தேன்’ தவறுதானே. குடித்தேன் என்று ஆக்கியபோது சுமாராக வந்தது. தேவாசீர்வாதம் புலவர் ”அது செரிதேண்டே மக்கா.. கஞ்சித்தலைவன்னுகூட ஒரு பழைய படம் வந்திட்டுண்டு. ஏழைகளுக்க அமிருதம்லா கஞ்சி? பதார்த்த குணசிந்தாமணியிலே என்ன சொல்லியுருக்குண்ணாக்க… ” என்றார். ஆனால் பள்ளியில் என் நண்பன் கோலப்பன் ஆசாரி அதை பாட முடியவில்லை. ‘தம் -பீ…. ‘என அவன் இழுத்தபோதே பையன்கள் மூக்கைப்பிடித்துக் கொண்டு ‘லே! லே!” என்று கூவி அமரவைத்துவிட்டார்கள். அதன்பின் அவன் ‘தன்பீ ‘ கோலப்பன் என்று அழைக்கப்படலானான்.
எம்.ஜி.ஆர் படத்தின் காதல்பாடல்கள் பதின்பருவத்தில் எனக்கு முகப்பரு போலவே தொட்டால் தீராத, விடவும் முடியாத சிக்கலாக இருந்திருக்கின்றன. ‘இதுதான் முதல் ராத்திரீ..ஈஈ…அன்புக்காதலீ..ஈஈ–ஈஈ என்னை ஆதரீஈஈ…” காதலி முதல் ராத்திரியில் ஆதரவு கொடுக்க வேண்டுமா? ஏதாவது ஒப்பந்தம் கையெழுத்தாகுமா? நிபந்தனையுடன் ஆதரவு, வெளியிலிருந்து ஆதரவு என பலவகை உண்டு என்று தெரிய மேலும் பத்து பதினைந்துவருடம் ஆகியது. அதைவிட குழப்பம், என்னதான் இலக்கிய நயமென்றாலும் காதலியை ஈ என்று அழைக்கலாமா? சுற்றிச்சுற்றிவருவதனாலா? இல்லை, காதருகே பாடிக்கொண்டே இருப்பாளோ? பிடி கிடைக்காமல் இருப்பதனால்கூட இருக்கலாம். நெடுநாள் ஐயம் சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோ போனபோது தீர்ந்தது. பலநூறு டீ கோப்பைகள் வைக்கபட்டு வைக்கப்பட்டு வாலி எழுதும்போது அப்பிராந்தியமெங்கும் ஈ பறந்திருகலாம். பாட்டு முழுக்க ஈ தான். ”அடி¨மைஈஈ இந்த சுந்தரீஈஈ..”
எம்ஜியாரின் பேச்சு வேறு எங்களுக்கு புரிவதில்லை. தீப்பொறி ஆறுமுகம் மேடையில் சொல்லும் நகைச்சுவை ஒன்று உண்டு. ஆசிரியர்கள் போராட்டம் நடந்தபோது அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த எம்.ஜி.ஆர் சொன்னாராம் ”உங்களுக்கெல்லாம் பைப்பு இருக்கு பம்பு இல்லை”. ஆசிரியர்கள் திக்பிரமை அடித்துபோய் பேச்சுவார்த்தை முறிந்தே போயிற்று. தலைவர் சொன்னது படிப்பு இருக்கிறது பண்பு இல்லை என்று. குலசேகரத்தில் பல வசனங்களை நாங்கள் கேட்டு அடைந்த கதையும், பெற்ற நெகிழ்ச்சிகளுமே வேறு. ” அம்மா, உங்க மகன் எப்பியாவது பயிச்சு பெய்யவனாய் அந்த பாயிகளை பாய் வாங்குவேன்…”. நம்பியார் ஜமக்காள வியாபாரியாதலினால்தான் பாய்வாங்குவதை தடுக்க முயல்கிறாரா?
அதேபோல காதல் வசனங்கள். ”கமலா, நீ என்னை தப்பா புழிஞ்சுக்கிட்டே…[அடிப்பாவி] என்னை கயமை அய்க்குது. எங்கம்மாவுக்கு நான் ஒரு சத்தியம் செஞ்சு குதித்திருக்கேன்….” பொன்மொழிகளும் சிக்கலானவை ”தேய்ஞ்சு செஞ்சா தவழு. தேயாம செஞ்சா தப்பு”. தப்புக்கு தவழ வேண்டாம், பெஞ்சுமேல் ஏறினால் போதுமா? உணர்ச்சிகரமான காட்சிகளில் நாங்கள் வெடித்துச் சிரிக்கிறோமென்பதனால் எங்களூருக்கு எம்ஜிஆர் படங்களையே கொடுக்கமாட்டோமென்று சொல்லப்பட்டது.”…அம்மா அப்பி சொல்லாதீங்கம்மா. தை செஞ்சு அப்பி சொல்லாதீங்க…உங்க மகன் ஒருநாளும் அப்பி செய்யமாட்டான்” எங்களூரில் அப்பி என்றால் சின்னப்பிள்ளை கொல்லைக்குபோவது என்றொரு பொருள் உண்டு.
ஆனால் ஒரு ஆச்சரியம் எனக்கு காத்திருந்தது. இருபதாண்டுகளுக்குப் பின்னால் என்னால் இப்போது ஒரு பழந்தமிழ் படத்தைக்கூட பத்துநிமிடம் பார்க்க முடியவில்லை. ஆனால் எம்ஜிஆர் படங்களை பெரும்பாலும் கடைசிவரை பார்க்க முடிகிறது — அம்புலிமாமா கதை படிக்கும் ஆர்வத்துடன். திரைக்கதை பற்றி கற்ற பின் இந்த இரண்டாண்டுகளில் கச்சிதமாகத் திரைக்கதை அமைக்கப்பட்ட படங்கள் என்று கணிசமான எம்ஜிஆர் படங்களைப்பற்றி என்ணத்தோன்றுகிறது. தமிழில் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த வணிகத்திரைக்கதை ‘எங்கவீட்டுப்பிள்ளை’தான்.
திலகம்
January 10, 2008 – 8:26 pm
பிள்ளைகளுக்கு நகைச்சுவை சினிமாக்கள் மேல் மெத்த ஆசை. நாகேஷைப் பிடிக்கும். சார்லி சாப்லின் படங்களை பலமுறை பார்த்திருப்பார்கள்.ஆனால் அன்று கேட்ட சிரிப்பொலி போல எப்போதுமே கேட்டதில்லை. வெடியோசை ,பீரிடலோசை, உடைந்து சிதறும் ஓசை, தாங்கமுடியாத கேவல்கள், ‘யம்மா முடியல்லியே’ என்பதுபோன்ற கதறல்கள்… அப்படி என்னபடம் என்று வியந்து நான் என் எழுத்தறை கதவைத்திறந்து பார்த்தேன். ‘திருவிளையாடல்’. தாட்சாயணியை சிவபெருமான் எரிக்கும் இடம்.
அடுப்புத்தீயை ஊதும்போது சிவாஜிக்கு குளோசப் வைத்திருந்தார்கள். செக்கச்சிவந்த முகத்தில் உதடுகள் கூம்பி கன்னம் துடிக்க ஊதினார். தீ எரியவில்லை போலும். மாறி சாவித்ரி ஊதினார். எரியவில்லை. கோபமாக ‘உலகில் இனி நாமே தனித்து இயங்கிக் கொள்வோம்’ என்றார். உடைந்த குரலில் சாவித்ரி ”சுவாமீ” என்றார். கைலாய மலைமுகடுகள் பின்பக்கம் நீலமும் வெண்மையும் கலந்து பெரிய கோன் ஐஸ்கிரீம்போல காணப்பட்டன. குளிருக்கு நன்றாக தின்று– அமுதமாக இருக்குமோ?– மலைமகளுக்கு நல்ல வளப்பமான தொப்பை. அப்பன் மட்டுமென்ன சளைத்தவனா? ”சக்தி இல்லையேல் சிவம் இல்லை!”
சட்டென்று சற்றும் எதிர்பாராமல் பார்வதி அம்மாள் ‘அஹ்ஹஹா!’ என்று நகைத்து தொப்பையுடன் சூலமெந்தி ஆடினார் ஒரு நாட்டியம், கஞ்சித்தண்ணி காலில் விழுந்ததுபோல. ”அப்பா ஆ·ப் பண்ணிரு அப்பா ….”என்று கண்ணிருடன் பையன் கூவினான். நான் சிவாஜி ஆடமாட்டாரென்று எதிர்பார்த்தேன். என்ன இருந்தாலும்–
ஆடினார். வென்னீர் குண்டாவை தூக்கிக் கொண்டு வேகமாக ஓடிவருகிறார். கடிக்கும் நாயை உதறி விலகுகிறார். எறும்புப்புற்றை மிதித்து விட்டுத் துள்ளுகிறார். நடுவே உள்ளே கட்டிய ஜட்டி நாடா அவிழ்ந்துவிட்டது என்பதுபோல ஒரு நெளிந்த நடை. குளோசப் காட்சியில் தொட்டி மீன் போல உதட்டை பிதுக்கிப் பிதுக்கி கன்னச்சதைகளை தனித்தனியாக அதிரவிட்டார். கன்னத்தை மட்டும் சிவாஜி அதிரவிட்டால் போதும் கழுத்துச்சதை தானாகவே அதிரும். தானாடாவிட்டாலும் சதை ஆடும்.
நடுவே ஒரு சான்ட்விச் நாலாகப் பிளந்தது. ஒரு பூவாணம் எரிந்தது. ”அது என்னடா என்னமோ கீழ விழுந்து ஒடையுது?” ‘என்றேன். ”அப்பா அது பூகம்பம் எரிமலை….நீ வேற சிரிப்பு மூட்டாதே…” என்றாள் கண்ணீர் வழியச் சிரித்த சைதன்யா. ஆட்டம் முடிந்து சிவாஜி நெளிந்து நிற்க நெற்றியிலிருந்து ஒரு ராக்கெட் கிளம்பி சென்று சாவித்ரியை எரித்தது. ”அப்பா ரியலிசமே இல்ல பாத்தியா? நெற்றியிலேருந்து ஜெட் எஞ்சின் மாதிரி கெளம்புது…அப்ப சிவாஜி அதே வேகத்தில மறுபக்கமா போகணும்ல?” .நான் விளக்கினேன்.”டேய் இது சிவபெருமான்…அவர் காலத்தில ஜெட் எஞ்சின்லாம் கெடையாது” பெண் புரிந்துகொண்டுவிட்டாலும் பையனுக்கு அது சரியான பதிலா என்று சந்தேகம்.
சிரிப்பு தொடர்ந்தது. சிவாஜி கடலில் பாய்ந்து மீனுடன் போராடுகிறார். அதன் பின் கரையில் கே.ஆர்.விஜயாவை நோக்கி பின்னழகு எம்பிநிற்க பன்னிப்பன்னி ஒரு மென்னடை . பையன் ”ஒரு ஆலயமாகும் மங்கை மனதூ…”என்று பாடினான். ”அப்பா இவனைப் பாருப்பா”என்று சைதன்யா கத்த ”என்னடா அது?” என்றேன். ”அந்தப்பாட்டிலே சீ·ப் மினிஸ்டர் ஜெயலலிதா இப்டியெதான் அப்பா நடந்து போவாங்க…” அதற்குமேல் அங்கே நிற்க மனம் வரவில்லை.
ஆனால் எங்களூரில் புகழ்பெற்ற ஒரு பழமொழியின் ஊற்றுமுகம் அப்போதுதான் புரிந்தது. ”நாலுநாளாட்டு தேகத்துக்கு ஒரு பெலக்கொறவு. சக்தியே இல்ல கேட்டியளா? சக்தி இல்லேண்ணா சீவன் இல்லேல்லா?”
சிவாஜியை எங்களூரில் ஆசாரிமார் தவிர்த்து பிறருக்குப் பிடிக்காது. வேறுயாருக்காவது பிடித்திருந்தாலும் மதிப்பான நாயர், நாடார் பட்டங்களை இழக்க விரும்பாமல் அமைதி காத்தார்கள். கணபதி ஆசாரி சிவாஜியைப்பார்க்க சென்னை சென்று வந்தவர். புதியபறவை சிவாஜி போல இறுக்கமான டெரிலின் சட்டை – எதிர்காற்றடித்தால் சட்டைக்குமேல் தொப்புள்குழி உருவாகும், ஆற்றுமணலில் சுழி பிறப்பதுபோல. முலைக்கண்களின் புள்ளிகள் தெரியும்– அணிந்து இறுக்கமான காற்சட்டையுடன் சினிமாவுக்கு தொடுவட்டி நாகர்கோயில் என்று கிளம்பிச் செல்வார். தலைமயிர் நெற்றியில் ஒரு குருவிக்கூடுபோல நிற்கும். சிவாஜியின் நடிப்பின் மைய இடம் கீழுதடு என அவர் அறிந்திருந்ததனால் ”அம்மச்சியே இது மாந்தடி தானே….? கறை இருக்குமே…. சேருக்கு போட்டா ஒட்டுமில்லையா?” என்று சிம்மக்குரலில் கேட்கும்போது கீழுதடு சி.டி டிரைவ் வெளியே வருவதுபோல வந்தபடியே இருக்கும். அதனாலேயே அவருக்கு ‘சுண்டன் ஆசாரி’ [சுண்டு-உதடு]] என்று ஊரில் பெயர்.
சிவாஜியின் உதடுகளுக்கு ஒரு மர்மமான பொருள் இருந்திருக்கிறது என்பதை சின்னவயதில் நான் அறிந்ததில்லை. மொத்தக்கூட்டத்தில் பாதி பக்கவாட்டில் அவர் பாடும் காட்சிக்காக காத்திருந்து அது வந்ததும் ”டேய்…டேய்ய்…”என்றும் ”ஊ… ஊ…” என்றும் ஒலியெழுப்பி மகிழ்வதைக் கண்டிருக்கிறேன். இதற்காகவே சிவாஜி படம்பார்க்கப் போகிறவர்கள் உண்டு.
பொதுவாக முக்கிய கட்டங்களில் பாடித்தொலைக்கிறவர் என்ற குற்றச்சாட்டு பரவல். ”என்னமாம் கேட்டா தாயளி சிவாஜி மாதிரி ஒடனே ஒப்பாரில்லா எடுக்கான்?”என்று சொல்லப்படும். தங்கை கல்யாணமாகிப்போகும் நேரம் வாசலில் டாக்ஸி காத்திருக்க, விருந்தினர் பஸ்ஸைப் பிடிக்கும் அவசரத்தில் நிற்க, பாசம் பீரிட அவர் பாடுவார். நெஞ்சடைக்க பாடாமல் சாக மாட்டார். அன்றெல்லாம் சிவாஜிக்கு காஸ்ட்யூம் அமைக்கும்போதெ கக்குவதற்கு கால் லிட்டர் சிவப்பு மையும் தயாராக வைத்திருப்பார்கள்.
‘தியாகம்’ படத்தில் சிவாஜியை வில்லன்கள் அடி அடி அடியென அரை ரீலுக்கு அடித்து ரத்தக் கோராமையாக்கி தூக்கி கடாசிவிட்டு போக, அவர் தரைவந்த மீன் என வாயை திறந்து தவிக்க, குலசேகரம் ‘ஸ்ரீபத்மநாபா’ தியேட்டரில் ஒரு ரசிகன் குரல். ”சொயம்பு அடி. நல்லா சதைச்சாச்சு…இனி அப்டியே தூக்கி தோலை உரிச்சு தலைகீழாட்டு தூக்குங்கலே…தொடைக்கறிக்கு கொள்ளாம்” இன்னொரு குரல் ”அண்ணா ஆடறுக்குத முன்னே புடுக்கு சுட நிக்காதே… படம் இனியும் உண்டு…”
அதையெல்லாம் மன்னித்த பாடகச்சேரி அன்பையன் வைத்தியர் ‘அண்ணன் ஒரு கோயி ‘லில் சுஜாதாவுடன் காட்டில் ஒரு நாலுக்கு மூன்று குழியில் தலைமாடு கால்மாடாக நெருங்கிப்படுத்துக் கொண்டு தலைக்குமேல் அடியாட்கள் தாவிப்பறக்கும் நேரத்திலும் அவர் ”நாலுபக்கம் வேடருண்டு நடுவினிலே மானிரண்டு காதல்…இன்பக் காதல்..”என்று பாடிய கொடுமையைத் தாங்க முடியாமல் ”யார்ல இவன், கேணையனுக்கு கோமணம் அவுத்தவனாட்டுல்லா இருக்கான்? பாடுத நேரத்தப்பாரு…ஏலே நாணு, கோரா, வாருங்கலே போவோம். இனி ஒரு நிமிசம் இந்த சுண்டப்பயலுக்க படத்த நாம பாக்கப்பிடாது” என்று கையில் எட்டுகட்டை டார்ச்சும் முண்டாசுமாக வீட்டுக்குக் கிளம்பிவிட்டார்.
சிவாஜிபடங்களின் நகைச்சுவையின் உச்சம் சண்டைக்காட்சிகள்தான். ‘அவன்தான் மனிதன்’ என்றபடத்தில் அவர் சண்டைக்காட்சியில் நடித்தபோது நாக்கைக் கடித்தபடி கையை வெடுக் வெடுக் என்று முன்னால் நீட்டி பின்னால் இழுப்பார். அடுத்தக் கணம் வேறு எங்கோ ஒரு ஆசாமி எம்பிக்குதித்து சுழன்றடித்து துள்ளி மறிந்து சண்டைபோடுவான். மீண்டும் சிவாஜியின் கைகள், கடிக்கப்பட்ட நாக்கு. ”வைக்கோலு பிடுங்குகான்” என்று அப்பி தாமோதரன் சொல்ல அது சிவாஜிப்பட சண்டைக்கான சொல் ஆகியது. ”சுண்டன் படம் எப்பிடி மச்சினா?” ”நாலு வைக்கோலு இருக்குலே..அது கொள்ளாம், சிரிக்க வகையுண்டு…பின்ன கடசீ சீனிலெ மசி துப்பி சாவுதாரு. அங்கிணயும் மனசு தெறந்து சிரிக்கிலாம்… ஒருமாதிரி கொள்ளாம் கேட்டியா?”
ஆனால் அது ‘தர்மராஜா’ வரும்வரைத்தான். அதில் சிவாஜி குண்டான உடல் மீது வெள்ளைக் கிமோனோ அணிந்து கராத்தே நிபுணராக நடித்தார். அன்னியர் பால் கறக்க முற்பட்டால் எருமை காலைத்தூக்கி உதறுவது போல குங்·பு சண்டை போடுவார். ஆகவே ‘கறப்பு’ என்று ஆகியது அக்கலைச்சொல். பிற்காலத்தில் எல்லா படத்திலும் டபிள் பிரஸ்ட் கோட்டு அணிய முற்பட்டார்– ‘லாரி டிரைவர் ராஜாக்கண்ணு’வாக நடித்தபோதும் கூட. ‘மன்னவன் வந்தானடி’ படத்தில் ஒரு கழுதைமீது ஏறி ‘நான் நாட்டை ஆளப்போறேன்.அந்த கோட்டையைபிடிக்கப் போறேன்..’ என்று பாடிச்செல்வார். டென்னிசன் என்னிடம் ”லே மக்கா, சித்ரா பவுர்ணமி படத்திலயும் இதேமாதிரி ஒரு சீன் உண்டுல்லா?”என்றான். சிவாஜி தலையில் வைக்கோலால் ஆன விக் வைத்து நடித்த சித்ரா பௌர்ணமி ஒரு தேசி-டார்ஜான் படம். ”லே,அது குதிரை…”என்றேன் கடுப்புடன்.”ரெண்டிலயும் ஒரேமாதிரித்தானே இவரு போறாரு?”
பொதுவாக எங்களூர்க்காரர்கள் யதார்த்தமானவர்கள். ஜெனரல் சக்ரவர்த்தி படத்தில் சிவாஜியின் பெண் கர்ப்பம். அவர் அலைந்து திரிந்து மகளின் காதலனைக் கண்டுபிடித்து கரம்பிடிக்கச் செய்கிறார். கடைசிக்காட்சியில் வீடு திரும்பினால் மனைவி கே.ஆர்.விஜயாவும் கர்ப்பம். சிவாஜி மொத்த திரைச்சீலையை ஆக்ரமித்து சட்டையை மடித்து கையை முண்டா பிடித்து தசையைக் காட்டுகிறார். ராஜப்பன் சொன்னான் ”சோலி தீந்து மக்கா…. சுண்டன் அவள போட்டுத் தள்ளிருவான்…” .நான் பதற்றத்துடன் ”ஏம்லே?” என்றேன். ”பின்ன அவருக்கு வயசு காலம்லா? பெஞ்சாதி கெர்ப்பமா வந்து நிண்ணா கொல்லமாட்டாரா? அதாக்கும் கையை காட்டுதாரு”
ஆனால் கையுடன் படம் முடிந்துவிட்டது. ஒன்றும்புரியவில்லை. கொன்றாரா இல்லையா? ”பின்ன? தட்டுவாணிய சும்மா விடுகதா?”என்று ராஜப்பன். கர்ப்பத்துக்கு அவர்தான் காரணம் ,ஏற்கனவே ”ஹலோ மை டியர் டாக்டர், சுகமில்லை டாக்டர்”என்று பாடினாரா இல்லையா என்றேன். ”அதுபின்ன வயசானா சுகக்கேடு வராதா? சும்மா கெடலே”. தன் குழந்தை என்று மகிழ்ந்து ஏன் சிவாஜி புஜத்தை காட்டியிருக்கக் கூடாது? ”ஆருலே இவன்? கோட்டிக்காரனா இருக்கான்? கைய வச்சா கெர்ப்பம் உண்டாகுது? பேசாம வா” அந்த ஐயம் எனக்கு பத்துவருடம் நீடித்தது.
உச்சம் ‘திரிசூலம்’. அதில் மூன்று நடிப்பு. மும்மடங்கு. இரு கதாபாத்திரங்கள் முழுக்கமுழுக்க நகைச்சுவை. கிழ சிவாஜிக்கு பக்கவாட்டில் பார்த்தால் தலைகீழ் தேங்காய்மூடி போலத்தெரியும் தாடி. அவர் கே.ஆர்.விஜயாவை பிரிந்திருப்பார். பிரிவுத்துயர் தாங்காமல் தினம் இரண்டு லார்ஜ் ஏற்றிக் கொண்டு [சிவாஜி காங்கிரஸ்காரர் ஆதலினால் படத்தில் இக்காட்சியை காட்டமாட்டார்கள். ஊகம்தான்] சாட்டையால் தன்னைத்தானே பளார் பளார் என அடிப்பார். அப்போது எதிர்பார்க்கப்படுவதுபோலவே உதடுகள் துடிக்கும்,கன்னம் அதிரும்.
நடுவே அந்த அம்மாள் ·போனில் இவரைக் கூப்பிட உணர்ச்சிப்பரவசப் பெருவெள்ளம். அரங்கில் அமர முடியாது. போனிலேயே பாட்டு. ”அம்மாடி உன் மேனி பால்வெண்மையோ அழகான உன்பிள்ளை தேன்கிண்ணமோ?” அக்கால வழக்கப்படி டெலி·போன் ஆபரேடர் நடுவே நுழைந்து ”த்ரீ மினிட்ஸ் ஓவர் ப்ளீஸ்” என்று சொல்லியிருப்பார். சிவாஜி ,நடிகர்திலகம். அசருவாரா? அழுதபடியே ”எக்ஸ்டன்ஷன் ப்ளீஸ்”என்று சொல்லியிருப்பார். அந்தம்மா ஈடுகொடுத்து ‘வாங்கி நடிக்கும்’ வல்லமை கொண்டவர். ”என்னங்க? ஏங்க…?” அதற்கு இவர் ” அம்மா, டெலிபோனுக்குச் சொன்னேனம்மா….” என்று ஏங்க, உடனே டெலி·போன் ஆபரேட்டர் ”டூ மினிட்ஸ் மோர் ப்ளீஸ்..”. ”என்னங்க, மிச்சத்தையும் பாடீடுங்க” விம்மல், கேவல். ”அம்மாடி உன்மேனி…”
ஆனால் சின்ன சிவாஜி பெரிசை தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட்டு தாம்பூலமும் போட்டுவிடுவார். நூற்று இருபதுகிலோ எடையும், சிவப்பு டபிள் பிரஸ்ட் கோட்டும், வெள்ளை பாண்டும், பூரான்கோடுமீசையும் கொண்ட கல்லூரி மாணவர்! எப்போதும் நடனம் வேறு. காதலியை சந்தித்த முதல்காட்சியிலேயே நடனமாடியபடி அவளிடம் வம்பு செய்து காதலிக்கப்பெறுகிறார். வில்லன்களை அடித்து அவர்கள் எழுந்துவரும் நேரம்வரை நடனமாடுகிறார். ‘கா-தல் ரா-ணி ! அ-கட்டிக்கிடக்க ! அ-கட்டில் இருக்கு! அ-கட்டழகுச் சிலையே வா !’ என்ற அதிவேக பாடல். ‘அ-புனைவு’, ‘அ-விமரிசனம்’ போன்ற சொற்களை விமரிசகர் நாகார்ஜுனன் இப்படத்தை சின்ன அம்பியாக சென்னை தியேட்டரொன்றில் பார்த்தபோதே உருவாக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
கோடவுன் இல்லாமல் வில்லன் இல்லை. வாஸ்துப்படி அதிலே ‘அப்பாஅம்மாத் தூண்’ என்று ஒரு தூண் நடுவே இருக்கும். அதில்தான் கதாநாயகனின் அப்பா அம்மாவைக் கட்டவேண்டும். கட்டுவதற்கு ஒருவன் இருப்பான். அவனுக்குத்தான் ‘கிளைமாக்ஸ்கட்டு’ என்ற பிரத்யேக முடிச்சு முறை தெரியும். கதாநாயகன் வந்துசேரும்வரை வில்லன் அட்டஹாசமாக சிரிக்க பலவித அடியாட்கள் பலவிதமாக உருட்டி முழிக்க அப்பா அம்மாக்கள்– சிலசமயம் காதலிகளும் உண்டு– உடலை அசக்கி அசக்கி முயன்றாலும் அது அவிழாது. கதாநாயகன் உள்ளே நுழைந்து பறந்து பறந்து பசங்களுக்கு நாலு அடிபோட்டு ”அம்மா!”என்று ஓடிவந்து அதை தொட்டதுமே பொலபொலவென அவிழ்ந்து போகும்.
திரிசூலத்திலே அப்பா அம்மாவைக் காப்பாற்ற இரு சிவாஜிகளும் ஒரு சினிமா தியேட்டருக்குள் ஓடாத காரில் அமர்ந்திருக்கிறார்கள். பின்பக்கம் திரையில் மலைப்பாதையின் காட்சிகள் பின்னோக்கி ஓடுகின்றன. பாட்டு. ”இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கேதான் எதிர்காலம்!” அண்ணா சிவாஜி உதடையும் வேண்டிய அளவுக்கு பயன்படுத்தி ஸ்டீரிங்கை கண்டபடி சுழற்றுகிறார். சின்ன சிவாஜிக்கு அப்பாமெல் என்ன கோபமோ ‘நல்லா வேணும் கிழத்துக்கு’ என்ற உற்சாகத்தில் மௌத் ஆர்கனை வாசிக்கிறார். நடுவே நூற்று இருபதுகிலோ எடையுடன் அண்ணா தோளில் ஏறி அமர்ந்தும் வாசிக்கிறார். அண்ணா முகத்தில் நவரஸங்களுடன் மூச்சுத்திணறலும் தெரியும்.
உச்சகட்ட நடிப்பு ”பகைவர்களே ஓடுங்கள் புலிகள் இரண்டு வருகின்றன!” என்ற வரிக்கு சின்ன சிவாஜி காட்டும் சைகைதான். தமிழ் நடிப்புலகில் அதற்கு ஈடு இணை ஏதுமில்லை. தென்னாட்டு மார்லன் பிராண்டோ என்று சிவாஜியை இதன்பொருட்டே சொன்னார்கள் என்று நினைக்கிறேன்.











24 பதில்கள் இது வரை ↓
msathia // பெப்ரவரி 17, 2008 இல் 11:58 பிற்பகல் |
ஆகா, தமிழ்ச்சண்டை ..மன்னிக்க, தமிழ்ப்பதிவுலகம் அடுத்த கட்டம் அடுத்த கட்டம் அப்படிங்கறதுக்கு நெசமாவே நகர ஆரம்பிச்சுடுச்சா?
Top Posts « WordPress.com // பெப்ரவரி 18, 2008 இல் 12:01 மு.பகல் |
[...] Jeyamohan vs Anandha Vikadan – Backgrounder, Tamil Blogs, MGR, Sivaji et al எல்லாப் புகழும் ஜெயமோகனுக்கே – புள்ளிவிவரப் […] [...]
anamikan // பெப்ரவரி 18, 2008 இல் 2:22 பிற்பகல் |
ஐயா நீங்கள் இதை ஜெயமோகனுக்கு அனுப்பினீர்களா?
bsubra // பெப்ரவரி 18, 2008 இல் 4:33 பிற்பகல் |
சத்தியா…
சர்வ நிச்சயமாய்
இன்றைய தேதியில் ஆங்கிலத்தில் jeyamohan என்று வொர்ட்பிரெஸ் பதிவில் எழுதினால், உலக அளவில் தலை நூறு பதிவுகளில் இடம் கிடைக்குமளவு தமிழர்களின் தேடலும் ஆர்வமும் விரிவடைய வைத்திருக்கிறது
bsubra // பெப்ரவரி 18, 2008 இல் 4:36 பிற்பகல் |
அனாமிகன்,
அனுப்பி வைச்சுப் படிக்க வைக்கிறதற்குப் பெயர் தன்னம்பிக்கை
தானா வந்து படிச்சுப்பார்னு நெனக்கிறதுக்குப் பெயர் தலைக்கனம்
நான் இரண்டாவது வர்க்கம்
சீரியஸாக…
ட்ராக்பேக் இருப்பதால் நான் தனிமடலில் அனுப்புவதற்கு பிரியப்படாதவன். வலையக நுட்பம் எல்லாவற்றையும் அவர் பயன்வடுத்தாவிட்டாலும் ‘மட்டறுக்கவும்’ என்று அவர் அஞ்சலில் இது போய் சேர்ந்திருக்கும் அல்லவா!
வெட்டிப்பயல் // பெப்ரவரி 20, 2008 இல் 9:43 பிற்பகல் |
//Thoppi//
இப்படி கூட தேடுவாங்கனு நினைக்கறீங்களா?
bsubra // பெப்ரவரி 21, 2008 இல் 3:18 மு.பகல் |
வெட்டி… ஹ்ம்ம்ம்… மாட்டார்கள்; கட்/காபி/பேஸ்ட் தப்பாக்கிடுச்சு
.:dyno:. // பெப்ரவரி 21, 2008 இல் 5:29 பிற்பகல் |
இன்னா ஜட்ஜூ… சாரு லின்க் இல்லையா? இப்போ அதுதானே ஹாட் மச்சி ஹாட்
bsubra // பெப்ரவரி 21, 2008 இல் 5:59 பிற்பகல் |
done…
லக்கிலுக் // பெப்ரவரி 22, 2008 இல் 5:31 மு.பகல் |
//14. எஸ். ராமகிருஷ்ணன் –
: ஜெயமோகன் வணக்கம்!: “(காலச்சுவடு, இதழ் 29)”//
அய்யா தாங்கள் கொடுத்துள்ள சுட்டியில் உள்ள கட்டுரை என்னுடையது, எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது அல்ல
அந்த கட்டுரையில் எஸ்.ராவின் ஜெமோ குறித்த ஒரே ஒரு மேற்கோளை மட்டுமே குறிப்பிட்டிருந்தேன்.
அனைவருக்கும் புரியும் வகையில் எனக்கு கட்டுரை எழுத தெரியவில்லையோ என்னவோ? பின்னூட்டம் இட்ட ஒருவர் கூட இது எஸ்.ரா எழுதியதா? லக்கி எழுதியதா? என்று சந்தேகம் தெரிவித்திருந்தார்
bsubra // பெப்ரவரி 22, 2008 இல் 11:33 மு.பகல் |
உங்க எழுத்து எஸ்.ரா தொடும் உயரங்களை எட்டும் அளவுக்கு நல்லா இருந்துச்சுன்னு சப்பைக்கட்டு போட ஆசைதான்
சுயகுறிப்பு: கட்டுரையைப் படித்து, கிரகித்து, பதிவு எடுக்கவும்
ஜமாலன் // பெப்ரவரி 23, 2008 இல் 7:40 பிற்பகல் |
இந்த சுட்டியை விட்டுவிடடீர்களே. கோட்பாடுகளுடன் பேசும் பதிவு:
http://naayakan.blogspot.com/2008/02/blog-post_15.html
bsubra // பெப்ரவரி 23, 2008 இல் 11:18 பிற்பகல் |
நன்றி ஜமாலன். இணைத்தாயிற்று!
ravisrinivas // மார்ச் 1, 2008 இல் 4:06 பிற்பகல் |
my 2 paise in thinnai of this week.
bsubra // மார்ச் 3, 2008 இல் 10:53 மு.பகல் |
Thinnai: “ஒர் அறிக்கை, ஒர் சர்ச்சை குறித்து ஒரு சாமன்யனின் 2 பைசா கருத்துக்கள்
ரவி ஸ்ரீநிவாஸ்”
வலைப்பதிவுகள் - அடுத்த கட்டம் « Snap Judgment // மார்ச் 4, 2008 இல் 3:52 மு.பகல் |
[...] இட்டுக் கொண்டு வந்த விகடனின் கைங்கர்யத்தாலும் அதற்கு நிகராகத் தொடரும் ஜெயமோகனின் [...]
சரத்குமார்: ‘மன வியாதியைக் காட்ட ஏதோ ஒரு இணையதள பிளாக்கில் கிறுக்கிய எழுத்துக்கள்’ | சற்றும // மார்ச் 7, 2008 இல் 4:59 பிற்பகல் |
[...] சமீபத்திய ஆனந்தவிகடனில், எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோர் குறித்து மூத்த எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கட்டுரை வெளியாகியிருந்தது. [...]
bsubra // மார்ச் 7, 2008 இல் 8:30 பிற்பகல் |
Thinnai: “ரவி ஸ்ரினிவாஸின் கருத்துக்கள் 2 பைசா பெறுமானமுள்ளவை அல்ல – வணக்கத்துக்குரியவன்”
K. Kesavasamy // மார்ச் 9, 2008 இல் 3:32 பிற்பகல் |
Jayamohan has the liberty to write what he wants to write in his Blog. But, for people like me, MGR was a symbol of fighting sprit – particularly post 1967, after his voice was damaged. MGR’s contribution to mass education through his films was really unparallel in any language. Any right thinking person would salute MGR unconditionally and gratefully.
Any individual will be ridiculed by somebody on certain specific issues. Jayamohan may get support of that negligible minority as far as MGR and Shivaj Ganesan are concerned. I belong to the majority.
I would like to underline the fact that one can not escape from the criticism on what was written, under the cover of ‘humour’!. Dear friends, that is not humour under any standard!
bsubra // மார்ச் 17, 2008 இல் 1:24 பிற்பகல் |
Vasantham Ravi வசந்தம் ரவி: தமிழ்மணத்தை புறக்கணிக்கும் எழுத்தாளர்களும் ஜெயமோகன் அடிக்கும் பல்டியும்
Muthukumar said…
“எழுத்தாளன் தன் அகங்காரத்தைக் கழற்றிவைத்து வணங்கக் கூடிய காலடி ஒன்று இருக்கவேண்டும். பாரதிக்கு நிவேதிதாபோல; குமாரனாசானுக்கு நாராயணகுருபோல. இல்லையேல் அவன் அழிவான். இது நான் எப்போதுமே சொல்லிவருவது. ரப்பர் நாவலில் கண்டன்காணி போல, காடு நாவலில் குட்டப்பன் போன்ற ஒருவரைக் கண்டால் அவனது அகந்தையின் படம் தாழவேண்டும். அற்பர்களிடமும் அதிகாரபீடங்களிடமும் மட்டுமே அவனது அகங்காரம் மீறி உயரவேண்டும்.”
என்று சொன்ன ஜெயமோகனின் அகந்தையின் படம் இந்த வக்கிர அற்பர்கள் கூட்டத்தின்முன் தாழ்ந்துபோனது ஒரு கலாசார சோகமே.
ஒரு சாதாரண கேலியைக்கூட சகித்துக்கொள்ள இயலாத – தாம் மட்டுமே சமூகத்தின் சகல பிரிவினரையும் இழிவுபடுத்த உரிமம் பெற்றதுபோல நடந்துகொள்ளும் – தங்களது கும்பல் வலிமையால் எவரையும் மிரட்டிப்பணியவைக்கும் இந்த கும்பலின் தாலிபானிஸ மனப்போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
- பொன்.முத்துக்குமார்
bsubra // மார்ச் 18, 2008 இல் 10:36 மு.பகல் |
தமிழ்2000: ஜெயமோகனைப் பற்றி சாருநி�
வசந்தம்ரவி // மார்ச் 22, 2008 இல் 1:57 பிற்பகல் |
பாலா அண்ணெ,
நான் ஜெமோவின் சர்சைக்குரிய கட்டுரைகளை மறுபதிப்பு செய்த போது ஆட்சேபம் தெரிவித்தார்கள், எடுத்து விட்டேன். நீஙக மட்டும் போட்டு இருக்கீஙகளே எப்படி?
bsubra // மார்ச் 23, 2008 இல் 7:26 பிற்பகல் |
வசந்தம்… சிலர் சொன்னால் கேட்பார்கள்; நல்லவர்கள்; நீதி, நியாயம், உலக தர்மத்திற்கு கட்டுப்பட்டவர்கள்.
என்னைப் போன்றோர் தமிழ்ப்பட வில்லன்கள் போல் சொன்ன பேச்சுக் கேட்காத வர்க்கம்.
David // மார்ச் 31, 2008 இல் 8:32 மு.பகல் |
What’s wrong with Jeyamohan’s writings. He has his own liberty.